Monday, 1 April 2013

“ஸ்டெர்லைட் - ஆலையால் பீதி.. கிடைக்குமா நீதி?”





தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (02.04.2013) தீர்ப்பு கூறவிருக்கிறது. இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையின்போது, ‘ஆலை மூடப்பட்டுள்ளது. அதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் அனுமதி கோரினார். ஆனால், “தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கும் நிலையில், புதிய அறிக்கையை ஏற்க முடியாது” என்று வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் கூறிவிட்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாதத்தை மட்டும் நீதிபதிகள் கேட்டனர். பிறகு, ‘இதையெல்லாம் நாங்கள் செய்தித்தாளில் பார்த்துவிட்டோம்’ என்று என்றனர் கூலாக. 

நியாயமான தீர்ப்பு கிடைக்குமா என்ற ஐயம் எழுகிறது.

2011 நவம்பர் மாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றிருந்தேன். அப்போது நான் எழுதிய கட்டுரை இது.

 ஸ்டெர்லைட் -  பெரும் சர்ச்சைக்குரிய பெயர்

இதுவொரு தாமிர உருக்காலை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக தூத்துக்குடியில் நிர்மாணிக்கப்பட்டது. தொடங்கிய காலம் தொட்டு இன்று வரையில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தின் கடைக்கோடிப் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான தூத்துக்குடியில், நகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் உள்ளது அந்த ஆலை. 
ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது தெற்கு வீரபாண்டியபுரம். அந்தக் கிராமத்தை நோக்கி சாலையில் பயணிக்கும்போது, ஆலையின் பின்புறத்தில் கன்னங்கரேலென பெரிய மலை ஒன்று தென்படுகிறது. அதன் மீது சில மஞ்சள் நிற லாரிகள் தீப்பெட்டி சைஸில் தென்படுகின்றன

 “அதைக் கல்குவாரி என்று நினைத்து விடாதீர்கள். அது முழுக்க ஸ்டெர்லைட் ஆலையின் திடக்கழிவுகள்" என்று சொல்லி மூச்சடைக்க வைத்தார்என்னுடன் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் நண்பர் ஒருவர்.

தெற்கு வீரபாண்டியபுரத்தில்... 

எல்லா பத்திரிகைக்காரர்களும், டி.வி.க்காரர்களும் வந்துட்டுப் போயிட்டாங்க. பெரிய பெரிய தலைவர்களெல்லாம் கூட வந்துட்டுப் போனாங்க. ஆனா, யாராலும் இந்த கம்பெனியை ஒன்னும் செய்ய முடியலை" என்று விரக்தியான குரலை ஒலித்தார், வயதான பெண்மணி ஒருவர். 

“அதளக்கா, வெள்ளரிக்கா, சோளம், கேழ்வரகு என பொன் விளையும் பூமியாக விளங்கிய மண் இது. இங்கு விளைகிற அதளக்காதான் தூத்துக்குடி பகுதி முழுவதும் சப்ளையாகும். அவ்வளவு ருசியாக இருக்கும்" - வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒருவரின் குரலில் சோகம்.  

சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர் என ஆரோக்கியமான சூழல்லதான் வாழ்ந்தோம். இன்னைக்கு எல்லாமே நாசமாப் போச்சு. திடீர் திடீர்னு ஒருவித நாற்றத்தோட காற்று வீசுது. அந்த நேரத்துல கடுமையான மூச்சுத்திணறல் வருது. ராத்திரியானா தூங்க முடியல. ராத்திரியிலதான் அதிகமா நச்சுவாயுவைத் திறந்து விடுறாங்க. கை, கால் குடைச்சல் எடுத்து தூக்கமே வரமாட்டேங்குது. எங்க ஊரு தண்ணியும் கெட்டுப்போச்சு. போர் தண்ணி மஞ்சள் கலரா வருது. அதில் குளிச்சா, தேமல் மாதிரி உடம்பில் வருது. அந்தத் தண்ணியை வாயில வச்சா, நாக்கும் தொண்டையும் அரிக்குது. இந்த ஊர்ல நிறையப் பேருக்கு தோல் வியாதி இருக்கு. சீவலப்பேரியில இருந்து பத்து நாளைக்கு ஒருக்கா தண்ணி வருது. குடிக்கவும் சமைக்கவும் அதுதான்" என்று ஊரின் ஒட்டுமொத்த வேதனைகளையும் கொட்டித் தீர்த்தார் தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த மாரியம்மாள்.

அங்கிருந்து மீண்டும் அதே சாலையில் திரும்பினோம். அந்தத் திடக்கழிவு மலை மீண்டும் காட்சியளித்தது. அந்தக் கழிவு பற்றிய விவரங்களை விவரிக்க ஆரம்பித்தார் என்னுடன் வந்த பத்திரிகையாளர் நண்பர். அதில் கலந்திருக்கும் நச்சுகள், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அவர் கூறிய விவரங்கள் நமக்குப் பெரும் மிரட்சியூட்டின.
 
மேலும் மேலும் குவிந்துகொண்டிருக்கும் அந்தத் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு எந்தவொரு திட்டமும் ஆலை நிர்வாகத்திடம் இல்லை என்றும், அக்கழிவுகளை அகற்றுவதற்கு வாப்புகளே இல்லை என்றும்
சொன்னார் அந்த நண்பர்

சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (செப்டம்பர் 20, 2010) உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று, நச்சுப்புகையை கனஜோராக கக்கிக்கொண்டிருந்த அந்த ஆலையை அச்சத்தோடு பார்த்தவாரு கடந்து சென்றோம்

 ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்புறத்தில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது மீளவிட்டான் கிராமம். அந்த சுற்றுவட்டாரத்தில் பெய்கிற மழைநீரின் ஒரு பகுதி நேராக, மீளவிட்டான் பகுதிக்குத்தான் ஓடி வருகிறது. கூடவே, அழையா விருந்தாளியாக நச்சும் கலந்துவருகிறது

“இங்கு ஓடி வர்ற தண்ணி, கண்ணாடி மாதிரி தெள்ளத்தெளிவா இருக்கும். ஆனா, தரையில் சுண்ணாம்பு மாதிரி வெள்ளை நிறத்துல என்னமோ படிஞ்சிருக்கும். அந்தத் தண்ணியைக் குடிச்சுப் பார்த்தா, ‘குளுகுளுன்னு இருக்கும். அடுத்த நிமிஷமே நாக்கும் லேசாக எரியும். தொண்டை, ‘கரகரன்னு இருக்கும். அந்தத் தண்ணியக் குடிச்சுத்தான் எங்க ஊரு ஆடு, மாடெல்லாம் நோய்வாய்ப்பட்டு செத்துப்போச்சு. மிஞ்சி இருக்கிற ஆடு, மாடுகளும் ஒன்னு ஒன்னா செத்துக்கிட்டு இருக்கு. இப்ப சினையாகிற ஆடுகளுக்கு ஊனமான குட்டிகளாகத்தான் பிறக்குது. போன மாசம் கூட, ஒரு குருட்டுக் குட்டி பிறந்து, கொஞ்ச நாள்ல சோத்துப் போச்சு" என்று சோகத்துடன் பேசுகிறார் சந்தானம்.
இவர், ஒரு காலத்தில் நாற்பது, ஐம்பது ஆடு, மாடுகளை வளர்த்து அப்பகுதி முழுவதும் பால் விநியோகம் செய்தவர். அவருடைய ஆடு, மாடுகள் எல்லாம் செத்துப்போயின. இப்போது, பாக்கெட் பால் வியாபரம் செய்கிறார்.

மீளவிட்டானுக்கு அருகாமையில் உள்ளது சில்வர்புரம். அங்குள்ள கண்மாய்க்கு, ‘சீனாகானாகண்மாய் என்று பெயர். கண்மாய்க்குள் நுழைய முடியாத அளவுக்கு மண்டிக் கிடக்கின்றன கருவேல மரங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மிகவும் பிரபலமான இடம்

சென்னைக்கு மெரினா கடற்கரை மாதிரி, தூத்துக்குடி மக்களுக்கு சீனாகானா கண்மாஎன்கின்றனர் அந்த ஊர் மக்கள். 

“அது வெறும் கண்மாய் அல்ல. தென்னை, மா, பலா, கொய்யா என விதவிதமான மரங்கள் கொண்ட மிகப் பெரிய சோலை. தூத்துக்குடி மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத்தளமும் அதுதான். காணும் பொங்கலுக்கு தூத்துக்குடி மக்கள் எல்லோரும் சீனாகானா கண்மாய்க்குச் சென்று மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிப்போம். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுநீர் புகுந்து, அந்தக் கண்மாய் இன்றைக்கு நாசமாகி விட்டது" என்று வேதனையோடு விவரிக்கிறார், மா.ஜான்சன். ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் ஸ்டெர்லைட் ஆலையைக் கடுமையாக எதிர்த்து வருபவர் இவர்.  
மீளவிட்டான் கிராமத்தில் சுமார் 450 குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால், இப்போது இருப்பது 330 குடும்பத்தினர் மட்டுமே. மீதி 120 குடும்பங்கள் எங்கே?

இனிமேல் இங்கு வாழ முடியாதுஎன்று முடிவுக்கு வந்த பலரும் கிராமங்களை விட்டு வெளியேறி தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற நகரங்களில் குடியேறி விட்டார்களாம். அவர்களுடைய வீடுகளில் இப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கிற பீகார், ஒரிசா மாநிலத்தவர் வாடகைக்கு வசிக்கிறார்கள்

“இதுவரை எங்க ஊருல கேன்சர் நோயால ஆறு பேரு செத்துப் போயிருக்காங்க. ஸ்டெர்லைட் ஆலையில கார்பெண்டர் வேலை செஞ்ச தங்கவேல் ஆசாரி, கொஞ்ச நாளைக்கு முன்னால நுரையீரல் புற்றுநோயால
செத்துப் போனாரு. போன மாசந்தான் ஒரு பொம்பளை, மார்பகப் புற்றுநோய் வந்து செத்துச்சு. மூளைப் புற்றுநோ வந்துகூட ஒருத்தர் இறந்து போனாரு. எங்க ஊருல இன்னும் எத்தனை பேருக்கு புற்றுநோய் இருக்கும்ங்கிறதை, சோதிச்சுப் பார்த்தா தெரிஞ்சிரும்" என மிரட்சியுடன் கூறுகிறார் பரமசிவம்.

“எங்க கம்பெனியோட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தானே உங்க வீடுகள்ல வாடகைக்கு இருக்காங்க. உங்க ஊரு பெட்டிக்கடையில சாமான்கள் வாங்குறாங்க. இதெல்லாம் உங்களுக்கு மறைமுக வருமானம்தானே. அப்புறம் ஏன் எங்களை எதிர்க்கிறீங்கன்னு ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் கேட்கிறாங்க. இந்தக் கொடுமையை எங்கே போய்ச்
சோல்றது?" என்று விரக்தியோடு சிரிக்கிறார், மீளவிட்டானைச் சேர்ந்த முத்துராஜ்.

 வேலைவாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட சமூக முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சி இன்றியமையாதது. அதேநேரத்தில், தவறான திசை வழியில் செல்கிற தொழில் வளர்ச்சியை நிச்சயமாக வரவேற்க முடியாது.
 ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால்தான், தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், 2,000 கடல்வாழ் உயிரினங்களும், 200 வகையான தாவரங்களும், 21 தீவுகளும் உள்ள தேசியக் கடல் பூங்காவில் இருந்து, 15 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய விதி மீறல்.

“சுற்றுச்சூழல் பாதிப்பை மட்டுப்படுத்தும் வகையில், ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவிற்கு பசுமை வளாகம் அமைக்க வேண்டும் என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனை. ஆனால், 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமை வளாகம் அமைக்க முடியாது என்று சொன்னார்கள். எனவே, 250 மீட்டர் என்பதை, 25 மீட்டராகக் குறைத்தது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். அந்த 25 மீட்டர் அளவுக்கும் கூட பசுமை வளாகம் அமைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். நீரி (National Environmental Engineering Research Institute) குழுவினர் ஆவுக்கு வருகிறார்கள் என்றவுடன், ஆந்திராவிலும் கேரளாவிலும் இருந்து பெரிய மரங்களை பிடுங்கி, லாரிகள் மூலமாக கொண்டு வந்து நட்டு வைத்தார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி" என்று கொதிக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் பாத்திமா பாபு

“சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் ஆலை நிர்வாகம் எடுக்கவில்லை என்பதைக் காட்டிலும், அதை மறைப்பதற்கு மோசடியான காரியங்களில் ஈடுபடுகிறது என்பது மிகவும் ஆபத்தானது" என்கிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.கனகராஜ்.

“ஸ்டெர்லைட் ஆலை வந்தபோது, அதற்கு ஆதரவளித்த ஒரே கட்சி, எங்களுடைய கட்சிதான். ஆனால், சுற்றுச்சூழல் விதிகளை மதிப்பதில்லை, எல்லாவற்றிலும் அலட்சியம் என்கிற போக்கு ஆலை நிர்வாகத்திடம் காணப்பட்டது. எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். 1998 முதல் இன்று வரையில் நிகழ்ந்துள்ள சம்பவங்களில், சுற்றுச்சூழல் குறித்து ஆலை நிர்வாகத்திற்கு எந்தக் கவலையும் இல்லை என்பது வெட்டவெளிச்சமானது. எனவே, அதை மூட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு" என்று கூறுகிறார், கனகராஜ்

அப்படியென்றால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் கதி

“நிரந்தரத் தொழிலாளர்கள் 1,300 பேர் இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறுகிறது. அதற்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலையில் பணியாற்றுகின்றனர். ஆலையை மூடிவிட்டால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்கிற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். ஆனால், இந்த ஆலையின் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பால், பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஏராளமான மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து
செல்கிறார்கள். அந்தப் பகுதியின் நிலத்தடி நீர், காற்று உட்பட ஒட்டுமொத்த இயற்கைச்சூழலும் அழிந்துவிடும் என்கிற அபாயகரமான சூழலில், அந்த ஆலையை மூடுவதைத் தவிர வேறு வழியே இல்லை" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார், கனகராஜ்.

 தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமல்ல, இந்த ஆலையால் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கிறார், தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.

எப்படி?

ஆஸ்திரேலியா, சிலி போன்ற நாடுகளில் மலைகளை வெட்டி எடுத்து தாமிரம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் அடங்கிய மண், கப்பல்கள் மூலமாக தூத்துக்குடிக்கு ஏற்றிவரப்படுகிறது. பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துகிற பல்வேறு வேதிப்பொருட்கள் அந்த மண்ணில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படும் மண்ணில், கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய யுரேனியம் இருக்கிறது.

ஒரு மாதத்திற்கு சுமார் எட்டு கப்பல்கள் வருகின்றன. அதில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன், மண் வருகிறது. ஓராண்டுக்கு 12 லட்சம் டன். அந்த மண்ணை துறைமுகத்தில் இருந்து தனியாக தண்டவாளம் அமைத்து, வேகன்கள் மூலமாக ஆலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதி. ஆனால், கப்பலில் இருந்து திறந்தவெளியில் லாரிகளில் கொட்டப்பட்டு, சாலை வழியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இப்படிச்
செல்வதால், ஊர் முழுக்க அந்த நச்சு கலந்த மண்
சிந்துகிறது. பெரும்பாலும் எல்லாமே வாடகை லாரிகள் என்பதால், வேலை முடிந்ததும் அருகிலுள்ள குளம், குட்டைகளில் லாரிகளைக் கழுவுகிறார்கள். இதனால், லாரிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த நச்சு மண், தண்ணீரில் கலக்கிறது. அந்தத் தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகள் நோய்களால் பாதிக்கப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களிலும் லாரிகளைக் கழுவுகிறார்கள். சில லாரிகள் கழுவப்படாமலேயே, துறைமுகத்திற்கு வந்து ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து கப்பலில் வந்திறங்கும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை குடோன்களுக்கு ஏற்றிச் செல்கின்றன. அந்த மூட்டைகளுடன் இந்த மண்ணும் சேர்ந்து செல்கிறது. அந்தப் பருப்புகள், மாவு மில்களில் அரைக்கப்படுகின்றன. உதாரணமாக, கடலைமாவு அரைக்கப்பட்டு, அது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடலைமாவு மட்டுமல்ல, கூடவே புற்றுநோய் உள்ளிட்ட நோய்களும் சேர்ந்தே போகிறது" என்று கூறி, நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார் அவர்

 சுற்றுச்சூழலுக்கு கேடு, மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பதைப்பற்றியெல்லாம் அந்த ஆலை உரிமையாளர்களுக்கு என்ன கவலை? ஸ்டெர்லைட் ஆலையால் அதன் நிறுவனருக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று தெரியுமா?

“லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானதுதான் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் வேதாந்தாவின் நிகர லாபம் 9,824 கோடி ரூபாய். அதில், தாமிர வர்த்தகம் மூலமாக, அதாவது ஸ்டெர்லைட் மூலமாகக் கிடைத்த வருவாய் 4,503.92 கோடி ரூபாய்” என்கிறது பி.டி.ஐ. செய்தி ( PTI July 26, 2011). 

வேறென்ன சொல்ல???
  

நன்றி : புதிய தலைமுறை (நவ. 10, 2011) 

படம் : க.அறிவழகன்



1 comment:

  1. இவ்ளோ கொடுமைகள் நடக்குதா? இந்தியன்னா இளிச்சவாயன்னு நெனப்பு அவிங்களுக்கு!

    ReplyDelete